Friday, October 23, 2009

இவர்கள் அடிமாடுகள்தான்!


நாளாக நாளாக ஈழத் தமிழுணர்வாளர்களின் வேகம், இலக்கு, செயல்பாடு எல்லாவற்றின் நிறங்களும் மங்கத் துவங்கிவிட்டதாய் தெரிகிறது. எனக்கு மட்டுமல்ல, சந்திக்கிற நண்பர்கள், வாசிக்கிற எழுத்துக்கள் எல்லாவற்றிலுமே அந்த பாதிப்பு இருப்பதை உணர முடிகிறது.

நாம் எதிர்பார்த்த நேர்மை இவர்கள் யாரிடமும் இல்லை என்பது கிட்டத்தட்ட இன்று தெள்ளத் தெளிவாகிவிட்டது.

தமிழீழத்திலே நடந்ததெல்லாம் பழங்கனவாய், முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த உயிர்ப்பலிகளெல்லாம் சர்வ சாதாரண விஷயங்களாய் இன்று மாறி வரும் தோற்றம்.

'அதெல்லாம் ஒரு விஷயமா... இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம். சம உரிமை என்ற பேத்தலெல்லாம் இனி எதற்கு...? இலங்கையில் தங்கும் உரிமையும் இருக்க வீடும் கொடுக்கப் போகிற ராஜபக்சேதான் நமது வணக்கத்துக்குரியவர்' என்று வெளிப்படையாகவே பேசித் திரிகிறார்கள்.

தன் இனத்தை அழித்த அந்த கொடுங்கோலனுக்கு, இங்கிருந்து குழுவாகப் போய் பொன்னாடை போர்த்துகிறார்கள். தாய்த் தமிழகத்திலோ, பக்சே சகோதரர்களுக்கு வாழ்த்துக் கவிதை வாசிக்கிறார்கள் ஆட்சிக் கட்டிலிலிருப்பவர்கள்.

'பிரபாகரன் என் தலைவன்... பிரபாகரன் வரும் வரை இயக்கத்தைக் கட்டிக் காப்பவன் நானே... புதிய புலிகள் நாங்கள்' என்று முழங்கிய திருமாக்கள், ராஜபக்சேவின் சபையில் தலை கவிழ்ந்து தமிழன் மானத்தைக் கப்பலேற்றிவிட்டு, இங்கே வெறும் காற்றில் வீரம் பேசுகிறார்கள்.

பிரபாகரன் வருவார்.. ஐந்தாம் கட்ட ஈழப் போருக்கு தலைமை ஏற்பார் என்று கணிப்பொறியின் விசைப்பலகை தேயுமட்டும் அடித்துத் தீர்க்கும் அருட் தந்தைகள், இந்தப் பக்கம் இந்திய ஏஜென்டுகளுடன் 'வந்தா பார்ப்போம்' என கீழ்க்குரலில் கிண்டலடிப்பதான தோற்றம்.

சூசை கடல் மார்க்கத்தில் தப்பித்ததாய் 1000 மடங்கு உறுதித்தன்மை மிக்க செய்தி சொன்னவர்களோ, இன்று அவர் 'ஜக்கத் அடித்தார்' என்று கூடவே இருந்து பார்த்தவர்களைப் போல கதைவிடுகிறார்கள்...

இத்தனை காலமும் பம்மித் திரிந்த டக்ளஸ்கள் உதவித் தொகை வழங்கும் காட்சிகள், கருணாக்கள் ஒயின் கோப்பையுடன் உல்லாசமாய் அழகிகளுடன் கூடிக் களிக்கும் கோலங்கள், நான்கே நாட்களில் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்துவிட்டதாய் பீற்றிக் 'கொல்லும்' தமிழின தலைவர்கள்...

இன்னும் நாம் பார்க்க வேண்டிய, ஆனால் பார்க்கக் கூடாத காட்சிகள் எவ்வளவோ இருப்பதாய் மனம் சொல்கிறது...

அவற்றில், இறுதிப் போர் எனும் பெயரில் தமிழ் தலைவர்களை, 20 ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்றழித்த ராஜபக்சேவுக்கு தமிழக அரசின் சார்பில் விருந்தளித்து கவுரவிக்கும் காட்சி ஒன்றும் பாக்கியிருக்கக்கூடும்!!

-எஸ்.பிரபாகரன்
23.10.2009

Thursday, October 15, 2009

சினிமா இல்லாமல் பத்திரிகையுலகம் இயங்க முடியாதா?

ந்தக் கேள்வியை இன்று பலரும் எழுப்பி வருகின்றனர். நிச்சயம் முடியும். இதற்கான பதிலுக்குப் போகும் முன் ஒரு முக்கிய விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்....

பத்திரிகை நடத்துபவர்கள் எல்லாம் பத்திரிகைக்காரர்கள் அல்ல. பத்திரிகை நடத்துபவர்கள் முதலாளிகளாகவும், பத்திரிகையாளர்கள் உழைக்கும் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

பத்திரிகையாளர் ஒருவரே உரிமையாளராகவும், செய்திகளுக்கான பொறுப்பாளராகவும் இருக்கும் போது தன் எண்ணத்தை முழுமையாக அமல்படுத்தலாம். ஆனால் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பவர்களால் தங்கள் கருத்ததை நிர்வாகத்திடம் சொல்லத்தான் முடிகிறது. "சரி பார்க்கலாம்... நீங்க இப்போதைக்கு இந்த நயன்தாரா மேட்டரை ரெடி பண்ணுங்க" எனும்போது, பத்திரிகையாளன் நிர்க்கதியாகிறான்.

சினிமா இல்லாமல் பத்திரிகை / தொலைக்காட்சி நடத்த முடியும் என்பதற்கு எத்தனையோ நல்ல உதாரணங்கள் உள்ளன. தமிழில் அப்படியொரு உதாரணம் மக்கள் தொலைக்காட்சி மற்றும் தமிழ் ஓசை நாளிதழ். இவை இரண்டும் நடத்தப்படுவது யாரால் என்பதைப் பாராக்காமல், அவற்றை எப்படி நடத்துகிறார்கள் என்று பார்க்க வேண்டும். மக்கள் தொலைக்காட்சியில் எப்போதாவது சில ரஷ்ய அல்லது ஈரானியப் படங்கள் திரையிடப்படுவதோடு சரி. வேறு சினிமா நிகழ்ச்சிகளே கிடையாது. நடிகர்கள் தயவு அவர்களுக்கு தேவைப்படுவதும் இல்லை.

தமிழ் ஓசை நாளிதழில் சினிமா செய்திகளே இல்லை. இரண்டும் நன்றாகத்தான் செயல்படுகின்றன. மக்கள் அவற்றுக்கும் ஆதரவை அளிக்கவே செய்கிறார்கள்.

ஆகவே, மீடியா நிர்வாகங்கள் இந்த விஷயத்தில் உடனடி முடிவை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.

என்னால் ஒரு விஷயத்தை உறுதியாக இங்கே பதிவு செய்ய முடியும்... பத்திரிகைகள் சினிமாவின் தயவின்றி நிச்சயம் வெற்றிகரமாக இயங்க முடியும். காரணம் ஒரு நாளிதழின் 16 பக்கங்களில் அதிகபட்சம் ஒரு பக்கம்தான் சினிமா செய்தி. அது கூட இன்றைக்குதான் அந்த நிலை. ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு வாரத்துக்கு ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம்தான் சினிமா செய்திகள் வந்தன. அதுகூட வாசகர்களின் கவனத்துக்கு சற்று ஓய்வு கொடுக்கும் பொருட்டுதான். எண்பதுகளில் தினமணியில் இடம்பெற்ற சினிமா செய்திகள் வெகு வெகு குறைவே. ஆனால் அன்றும் அந்தப் பத்திரிகை முதல் நிலை நாளிதழ்தான்.

அதற்காக சினிமா துறையை ஒதுக்கப்பட்ட ஒரு விஷயமாகவும் நினைக்கத் தேவையில்லை. கலை என்ற பார்வையில் எது நல்ல விஷயமோ, எது பாராட்டப்பட வேண்டியதோ அதை மட்டும் ஒரு செய்தியாகப் பதிவு செய்தாலே போதும். தேவையற்ற பிம்ப உருவாக்கல்களை நிறுத்தலாம். திகரையுலகின் தவறுகளை / ஒழுக்க மீறல்களை மக்களுக்கான எச்சரிக்கைகளாகத் தரலாம். அதன் பேரில் காவல் துறை நடவடிக்கைகளைக் கூட வலியுறுத்தலாம்.

திரைத்துறையினர் பத்திரிகையாளர்களை இன்று இத்தனை கேவலமாக, விலை மகன் என்று மேடைபோட்டு ஆபாசமாக திட்டக் காரணம், பெரும்பாலான பத்திரிகையாளர்களின் நடத்தைதான் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம்.

இன்றைக்கு முன்னணி சினிமா நிருபர்களாகப் பணியாற்றுபவர்களில் சிலர் பிரியாணிக்கும் கவருக்கும் மாலை நேர தண்ணிப் பார்ட்டிக்கும் அடிமையானவர்களாகவே இருக்கிறார்கள். நேர்மையானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் சினிமா சங்கங்களைச் சேர்ந்த சிலர் இணைய தளப் பத்திரிகையாளர்களை தயாரிப்பாளர்கள் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அழைப்பதில்லை (மற்ற விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு அழைக்கலாம்) என முடிவெடுத்து வாய்மொழியாக அறிவித்தார்கள்.

அதை ஆரம்பத்தில் எதிர்த்துப் பார்த்தார்கள் சினிமா பத்திரிகையாளர்கள். ஆனால் அதில் உறுதியோ ஒற்றுமையோ இல்லாமல் போக, கடைசியில் தயாரிப்பாளர்கள் வைத்ததே சட்டமானது. உடனே, பல இணையதளப் பத்திரிகையாளர்கள் சடாரென்று ஏதோ ஒரு பத்திரிகையின் பெயரைச் சொல்லி அதில் இணைந்துவிட்டதாக கடிதம் கொடுத்து, தயாரிப்பாளர்களின் நிகழ்ச்சிகளுக்குப் போகத் தொடங்கிவிட்டனர். எப்படி மதிப்பார்கள் பத்திரிகைக்காரர்களை...

விழாவுக்கு பத்திரிகையாளர்கள் வேண்டாம் என்று சொன்னால் விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாமே... எதற்கு அவர்களிடம் கூப்பிடுங்க கூப்பிடுங்க என்று கெஞ்சுகிறார்கள்...

ஒரு நாளிதழில் சின்னதாக விளம்பரம் வெளியாக வேண்டுமென்றால் கூட குறைந்தபட்சம் ரூ.10000 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் சினிமா செய்திகளை ஒரு முழு பக்கத்துக்கு இலவசமாக வெளியிட வேண்டிய அவசியமென்ன?

இணையதளங்களில் சின்ன பேனர் விளம்பரம் வைக்க லட்சக் கணக்கில் கட்டணம் விதிக்கப்படும்போது, இவர்களின் படங்களுக்கு இலவச ட்ரெயிலர் போடுவது எதற்கு?

சினிமாக்காரர்களை சட்டத்தை மீறிய பிம்பங்களாக மிகையாகக் காட்டிய பெரும்பிழையைச் செய்தவர்கள் பத்திரிகைகளே. அந்தப் பிழையைச் சரியாக்கவும், பிம்பங்கள் பின்தள்ளப்பட்டு, நல்ல மனிதர்களின் பிடிக்குள் நாடு செல்லவும் தேவையான புதிய பாதையில் இனியாவது பத்திரிகைகள் நடைபோடுமா?

எஸ்.பிரபாகரன்
16.10.2009

பாரதி எனும் நிஜமான மேதை!

த்தனையோ கவிதைகளைப் படித்திருக்கிறேன்.. ஆனால் என்னை வசமிழக்கச் செய்த கவிதை மகாகவி பாரதியாரின் 'இயற்கையை நோக்கி வினவுதல்'தான். அதற்கு இணையான ஒரு படைப்பு என இன்றளவும் எதையும் உயர்த்திப் பிடிக்க முடியவேயில்லை.

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? - பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலின் நீரோ? - வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ?

இந்தப் பாடலை எழுதிய காலத்தில் பாரதிக்கு 30 வயதிருக்கலாம்... அல்லது ஒன்றிரண்டு கூடுதலாக இருக்கலாம். ஆனால் அந்த வயதில் அவரின் சொற்பிரயோகம், அந்த சொற்களுக்குள் வாழ்க்கையின் சூட்சுமங்களை வினாக்களாக அவர் தொடுத்திருக்கும் அழகு பிரமிக்க வைத்தது... வைக்கிறது.

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?

கண்ணில் காணும் காட்சிகளெல்லாம் இன்றோ அல்லது என்றோ மறைந்து போகிறதென்றால், மறைந்த இக்காட்சிகளை நாம் மீண்டும் காண்போம் என்று அர்த்தமா...

யோசித்தால் ஏதோ ஒரு வடிவில் காட்சிகளும் நிகழ்வுகளும் நினைவுகளாகி பின் மறு பிறத்தலாய் வருவதை உணர முடிகிறது... மாலையில் மயங்கிச் சரியும் சூரியன் மறுநாள் உதயமாகி நிற்பதைப் போல. அப்படியென்றால் மறுபிறப்பு நிஜமோ...

பாரதி நிஜமான ஞானி. இந்த தத்துவ விசாரத்தில் பகுத்தறிவை இழக்கவில்லை. தன் சந்தேகங்களை இயற்கையிடம் கேட்டு, அந்த இயற்கையின் நிகழ்வுகளிலிருந்தே அதைத் தெளிய வைத்துக் கொள்ளும் மேதைமை அவரிடம் இருந்தது.

காலமென்றே ஒருநினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? - அங்குக் குணங்களும் பொய்களோ?

சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? - இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

என்று கேட்கும் அந்த மகாகவி, அடுத்த கணமே தெளிவைப் பெறுகிறார் இப்படி...


காண்பதுவே உறுதிகண்டோம், காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம்.

காண்பது என்றால் கண்ணால் பார்ப்பது என்றல்ல... எதையும் தீர விசாரித்து தெளிதல் மட்டும்தான் நிஜம். மற்றதெல்லாம் நிஜமல்ல என்ற தெளிவைப் பெறுகிறார். அந்தத் தெளிவு மட்டுமே வாழ்க்கையை உள்ளது உள்ளபடி உணர்ந்து கொள்ள உதவும்.

எஸ்.பிரபாகரன்
16.10.2009